(அபூ உமர்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில், எந்தவொரு கட்சியாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆட்சி அமைப்பதற்காக கட்சி இடையிலான கூட்டணி பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பிரதிநிதிகளும், தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர் ஏ. எல். எம். அதாஉல்லாஹ் அவர்களும் அண்மையில் சந்தித்து ஆலோசனைகள் மேற்கொண்டுள்ளனர்.
அச் சந்திப்பின் போது,
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தேசிய காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளது.
இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தேசிய காங்கிரஸிலிருந்து விலகி சென்றிருந்தாலும், அக் கட்சியின் தலைமை மீது கொண்ட மரியாதை மற்றும் விசுவாசத்தை நிலைநிறுத்தி வந்துள்ளார். அதாஉல்லாஹ் மற்றும் உதுமாலெப்பை ஒருவரை ஒருவர் மதிக்கும் உறவு தொடர்ந்த வண்ணமே உள்ளன.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய காங்கிரஸ், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான இந்த முயற்சி, உதுமாலெப்பையின் அரசியல் பயணத்தில் அவருடைய நிலைப்பாட்டுக்கும் விசுவாசத்திற்கும் கிடைத்த வெற்றியாகவே காணப்படுகிறது.
தான் அங்கம் வகிக்கும் கட்சிக்கும் தலைமைக்கும் என்றும் விசுவாசமாக இருப்பதே உதுமாலெப்பையின் வரலாறாகும். உதுமாலெப்பை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததிலிருந்து அக்கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருவதானது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலும் அதன் தலைமையிலும் அவர் வைத்துள்ள விசுவாசத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், இச்சந்திப்பில் பிராந்தியத்தின் எதிர்கால அரசியல் சூழ்நிலையும், பிற முக்கிய விடயங்களும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.