நீண்ட தூரங்களில் சேவை செய்யும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கு இன்ஜின் மற்றும் பொறியியல் நிலை குறித்த சரிபார்ப்பு அறிக்கையை பெறுவது வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் கட்டாயமாகிறது என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
இது, 100 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கை எனவும் அமைச்சர் கூறினார்.
மேலும், அதே நாளிலிருந்து அனைத்து பயணிகள் பேருந்துகளும் கட்டண வசதி வழங்கும் மின்னணு டிக்கெட் இயந்திரங்களை கட்டாயமாக பயன்படுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போக்குவரத்து பொறுப்பாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட, ஜூலை 1 ஆம் திகதியிலிருந்து பேருந்துகளில் பொருத்தப்படும் கூடுதல் சாதனங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.