ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தொடரும் நட்டம் – கோப் குழுவில் பேச்சு
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமையில் உள்ளதாகவும், இந்த நட்டத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும், கோப் குழு கூட்டத்தில் வெளிப்பட்டது.பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையில் நடைபெற்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக் கூட்டத்தில், 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் வைத்தியசாலையின் தற்போதைய செயலாற்றல் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டன.அந்த அறிக்கைகள் அடிப்படையில், சில நோயாளிகள் சிகிச்சை பெற்றபோதிலும் கொடுப்பனவுகள் வசூலிக்கப்படாமை, சிலருக்கு கட்டண தள்ளுபடிகள் வழங்கப்படுதல் ஆகியவை நட்டத்திற்கு காரணமாக இருப்பது குறிப்பிடப்பட்டது.மேலும், விசேட மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டபோதிலும், அவற்றிலிருந்து வைத்தியசாலைக்கு போதுமான வருமானம் வரவில்லை என்றும், அந்த சேவைகள் முன்னெடுக்க தேவையான உபகரணங்கள் வைத்தியசாலையிலிருந்தே பெறப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டது.2023ஆம் ஆண்டு அந்த சேவைகளுக்காக ஊழியர்களுக்குச் சுமார் 600 மில்லியன் ரூபாய் தொழில்முறை கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது.மதகுருமர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் குடும்பத்தினருக்கான இலவச சிகிச்சை திட்டமும் தற்போது நடைமுறையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்வகையான முறையற்ற சூழ்நிலையை தவிர்க்க, புதிய ஒழுங்குமுறை விரைவில் உருவாக்கப்பட வேண்டும் என கோப் குழு பரிந்துரைத்தது.