எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற விசேட அலங்காரங்களை அகற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (மே 21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது, அமைச்சர் இதைத் தெரிவித்தார்.
“போக்குவரத்து சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப, பஸ் உற்பத்தி நிறுவனங்கள் சில அலங்காரங்களைச் சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு அதிகமாக அமைக்கப்படும் அலங்காரங்கள் பாதுகாப்பு சிக்கல்களையும், விபத்துகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. குறிப்பாக, கெரண்டியெல்லை பேருந்து விபத்துப் போன்று பல விபத்துகளுக்கு இவையே காரணமாகியுள்ளன,” என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து பஸ்களிலும் பொருத்தப்பட்டுள்ள அத்தகைய தேவையற்ற அலங்காரங்களை அகற்றும் நடவடிக்கையை ஜூலை 1 முதல் ஆரம்பிக்கவுள்ளதாகவும், இது தொடர்பாக பொலிசார் வழிகாட்டல்களை வழங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இந்நடவடிக்கையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களமும் இணைக்கப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.