கடந்த அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளால், இன்று நோயாளர்கள் வைத்தியசாலைகளில் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 3,147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் 65% மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன, அதேசமயம் மொத்த தேவையின் 35% மட்டுமே உள்ளூர் உற்பத்தியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த மருந்து கொள்வனவுக்கான செயன்முறையை முன்னெடுக்க கால அவகாசம் தேவைப்படும் என்றார்.
மேலும், கடந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில், இவ்வாண்டிற்கான பயன்பாட்டுக்கான 67 வகையான மருந்துகளுக்கே முந்தைய அரசாங்கம் பொருட்கோடலை சமர்ப்பித்திருந்தது என்றும், இதன் விளைவாகவே இன்று மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச சுகாதார தரநிலைகளில் இலங்கை உயர்ந்த இடம் பெற்றுள்ளதாகவும், அந்த நிலையை பராமரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்வின் இறுதியில், குவைட் அரசாங்கம், இலங்கையிலிருந்து 2 வருட ஒப்பந்த அடிப்படையில் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.