மட்டக்களப்பு பாசிக்குடாவிலிருந்து காலி நோக்கி கொழும்பு வெல்லவாய வீதியூடாக பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்து இன்று (24) அதிகாலை தங்காலை, நெடோல்பிட்டிய வெலிஹார பகுதியில் டிப்பர் லொறியின் பின்புறத்தில் மோதியதில் கடுமையான விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து அதிகாலை 1.45 மணியளவில் ஏற்பட்டதாகவும், பேருந்தில் பயணித்த 12 பயணிகள் மற்றும் டிப்பர் லொறியின் சாரதியும் காயமடைந்து உடனடியாக தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பயணியொருவர் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவரது உடல் தற்போது தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.