2026 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதீட்டுத் திட்டம் தொடர்பில் பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதற்கான முக்கிய கலந்துரையாடல் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கலந்துரையாடலின் போது, 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தயாரிக்கும் நிலையில், மாவட்ட மட்டத்தில் உள்ள மக்களின் அடிப்படை மற்றும் அவசரத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டங்களின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், அவை மக்களால் நேரடியாக அனுபவிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.