மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக அளவில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், வடமத்திய மாகாணம், மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை, காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் சில நேரங்களில் கடும் கொந்தளிப்பை எதிர்பார்க்க முடியும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் பேரில், கடற்படை மற்றும் மீனவர்கள் குறித்த கடல்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென தற்காலிகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடனும், மழையுடனும் கூடிய வானிலை நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.