தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் வெளியிடும் தகவல்கள் முற்றிலும் அடிப்படையற்றவை என கைத்தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
அவர் கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 30) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதையடுத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்குள் எந்தவொரு முரண்பாடும் இல்லை. நாம் பொதுவான நோக்கத்துடனும், ஒற்றுமையுடனும் செயற்பட்டு வருகிறோம். எதிர்க்கட்சிகள் பரப்பும் அமைச்சரவை மாற்றம், பிரதமர் பதவி மாற்றம் போன்ற தகவல்கள் அரசியல் ரீதியாகத் தோல்வியடைந்தவர்களின் வதந்திகள்.”
“உப்பு பற்றிய பிரச்சினை தற்போது முடிவடைந்துவிட்ட நிலையில், சிலர் புதிய கலகம் உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அரசாங்க உறுப்பினர்கள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்படுகின்றனர். எந்தவொரு உட்கட்சி முரண்பாடுகளும் இல்லை.”
“ஊழலுக்கு எதிராக நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த அரசாங்கங்கள் ஊழல்வாதிகளை பாதுகாத்திருந்தன. ஆனால், எமது அரசாங்கத்துக்கும் ஊழல்வாதிகளுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.”
“நீதிமன்றங்கள் மற்றும் விசாரணை நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன. அவை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை. எனவே, ஊழல்வாதிகள் கைது செய்யப்படுவதை அரசியல் பழிவாங்கலாக கூற முடியாது.”