முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள அலுவலகத்தில் நேற்று (30 மே) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஆயுதங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள குறித்த அலுவலகத்தில் காலை பொழுதிலிருந்தே விசேட விசாரணை அதிகாரிகளால் சோதனை ஆரம்பிக்கப்பட்டது. இதில், 9 மில்லிமீற்றர் ரகத்திலான 6 தோட்டாக்கள், 3 கையடக்க தொலைபேசிகள், ஓர் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம், வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் வேறு வகையான துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சோதனை, கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006ம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்திரகாந்தன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பின்னணியில் மேற்கொள்ளப்பட்டது.
சந்திரகாந்தன் தற்போது 90 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.