வவுனியா புளியங்குளம் பகுதியில் மனதை உலுக்கும் கொடூரக் கொலை சம்பவம் இன்று (ஜூன் 3) இடம்பெற்றுள்ளது. தனது மனைவியை கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் கணவர், மனைவியின் வெட்டிய தலையுடன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் நேரில் சரணடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பொலிஸ் நிலையத்தை வந்த குறித்த இளம் குடும்பஸ்தர், தனது கையில் இருந்த பொலித்தீன் பையில் மனைவியின் தலை இருப்பதாகவும், உடலை காட்டுப்பகுதியில் எறிந்ததாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பொலிஸார் அவரை உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, சின்னப்பூவரசங்குளம் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து 32 வயதான சுகிர்தரன் சுவர்ணலதா என்ற ஆசிரியையின் உடல் மீட்கப்பட்டது. சம்பவத்தின் போது அவர் கர்ப்பிணியாக இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுவர்ணலதா, வவுனியா வடக்கு பகுதியில் உள்ள அரசு பாடசாலையொன்றில் ஆரம்பப்பிரிவு ஆசிரியராக பணியாற்றி வந்தவர். தம்பதிக்கிடையே நீண்டகாலமாக குடும்பத் தகராறு நிலவியதாகத் தெரிகிறது. இன்று காலை இருவரும் மோட்டார் சைக்கிளில் புளியங்குளம் நோக்கி புறப்பட்டுள்ளனர். அவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம், கொடூரக் கொலைக்குச் வழிவகுத்ததாக நம்பப்படுகிறது.
குற்றச்செயலில் ஈடுபட்டவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கோ. சுகிர்தரன் என்பவராக உள்ளார். சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.