அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காக, “உங்களுக்கு வீடு, நாட்டுக்கு எதிர்காலம்” எனும் தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகளை அமைக்கும் ஆரம்பப்பணிகள் கடந்த திங்கட்கிழமை (02.06.2025) ஆரம்பிக்கப்பட்டன.
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள இலுக்குச்சேனை, ஆலையடி வேம்பு, மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தம்பிலுவில் பகுதிகளில் வீடமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வை, அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினரான கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட தொழிநுட்ப முகாமையாளர் AGM. பாஹிம், அதற்குட்பட்ட அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.