பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்வது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்தவொரு இறுதி தீர்மானத்தையும் எட்டவில்லை என, பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை கூறினார்.
கல்வித்துறையில் காலத்திற்கேற்ப பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும், புலமைப்பரிசில் பரீட்சையை உடனடியாக ரத்து செய்யும் முடிவெதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், எதிர்காலத்தில் நடைமுறையில் கொண்டு வரவுள்ள கல்வி மறுசீரமைப்புகளுடன் இணைந்த வகையில், புலமைப்பரிசில் பரீட்சையின் செயற்பாடுகளை மாற்றுவதற்கான திட்டங்கள் உள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன், தற்போது பரீட்சையைச் சுற்றி காணப்படும் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் சில இடைக்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், இந்த மாற்றங்கள் 2028 அல்லது 2029 ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.