Top News
| துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு காவல்துறை அதிகாரி உயிரிழப்பு! | | மட்டக்களப்பு புகையிரத சேவைக்கான ஆசனப் பதிவினை கல்முனையில் மேற்கொள்ள நடவடிக்கை | | வருமானம் மீறி சொத்துக்கள் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது வழக்கு |
Jun 6, 2025

பாகிஸ்தான் – இந்தியா உலகக் கிண்ணப் போட்டிகள் இலங்கையில்

Posted on June 4, 2025 by Admin | 45 Views

இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி, தனது அனைத்து ஆட்டங்களையும் இலங்கையில் விளையாடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை, இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ICC) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், பாகிஸ்தானில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்திய அணி பங்கேற்க மறுத்ததையடுத்து, எதிர்கால போட்டிகளில் இரு அணிகளும் ஒன்றாக நேரடியாக விளையாடாமல், மூன்றாம் நாட்டு மைதானங்களில் ஆட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கிணங்க, செப்டெம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை நடைபெறவுள்ள 2025 மகளிர் உலகக் கிண்ணத் தொடரில், இந்தியாவின் பெங்களூர், குவாஹாத்தி, இந்தோர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுடன் இலங்கையின் கொழும்பும் போட்டிகள் நடக்கும் இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மகளிர் அணி கோப்பையின் குழு ஆட்டங்களை அனைத்தும் கொழும்பிலேயே ஆடும். இந்தியா–பாகிஸ்தான் மோதலும் இதில் அடங்கும். பாகிஸ்தான் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றாலும், அவைவும் கொழும்பிலேயே நடைபெறும்.

இந்தியா தனது தொடர் போட்டிகளை பெங்களூரில் ஆடவுள்ளது. பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு செல்லாத பட்சத்தில், இறுதிப் போட்டியும் அங்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எட்டு அணிகள் பங்கேற்கவுள்ள இந்த தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

முன்னைய மகளிர் உலகக் கிண்ணத்தை ஆஸ்திரேலியா வென்றது. 2022ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்ததை அடுத்து அவர்கள் சம்பியனானது. கொவிட் பெருந்தொற்றின் காரணமாக அப்போட்டியை முன்னெடுக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இலங்கையில் மழைக்காலம் அதிகம் காணப்படும் என்பதால், போட்டிகள் நடத்துவதில் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இந்தியா–பாகிஸ்தான் இடையிலான அரசியல் பதற்றம் காரணமாக, இவ்விரு அணிகள் பொதுவாக ICC போட்டிகள் தவிர ஒருங்கிணைந்த தொடரில் விளையாடுவதில்லை.

இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் நேரடி தகுதி பெற்றுள்ளன. பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதிகாண் போட்டி வாயிலாக இறுதி இரண்டு இடங்களை உறுதி செய்துள்ளன.

அதேவேளை, 2026ஆம் ஆண்டு மகளிர் T20 உலகக் கிண்ணம் ஜூன் 2 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதில் 12 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை நேரடி தகுதியுடன் இடம்பெறுகின்றன. மீதமுள்ள நான்கு அணிகள் தகுதிகாண் சுற்று மூலம் தெரிவுசெய்யப்படும்.