திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் இஜாஸ் மீது கடலுக்குச் சென்றபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கடுமையாக கண்டித்து, குற்றத்துக்குப்பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.
ஜூன் 3ஆம் தேதி, குச்சவெளி பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இஜாஸ் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிஷாட் பதியுதீன் தெரிவித்ததாவது:
“மீனவ தொழிலில் ஈடுபட்ட ஒரு அப்பாவி மீனவர்மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பாதுகாப்பு படையினரின் அதிகாரத்திற்கும் சட்ட ஒழுங்குக்கும் விரோதமானது. சந்தேகங்கள் இருப்பின், உரிய சட்ட வழிமுறைகளின்படி விசாரணை நடத்த வேண்டும். ஆனால், இவ்வாறு நேரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்துவது முற்றிலும் தப்பானது.”
மேலும் அவர் கூறியதாவது, “இந்நிலை தொடருமானால், மக்கள் பாதுகாப்பு தரப்பின்மீது வைத்திருக்கும் நம்பிக்கை குன்றும். மீனவ சமூகத்தை அச்சுறுத்தும் இவ்வகைச் செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பவம் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இது நாட்டின் சட்ட ஒழுங்கு நிலைக்கு இது ஒரு பெரும் சவாலாகவும் இருப்பதாகவும்” அவர் தெரிவித்தார்.