Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

இறக்காமத்திற்கு தனியான நீதிமன்றம் தேவை – உதுமாலெப்பை MP வலியுறுத்தல்

Posted on June 5, 2025 by Admin | 268 Views

(அபூ உமர்)

இறக்காமப் பிரதேசத்திற்கு தனியான நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட வேண்டுமென அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வலியுறுத்தியுள்ளார்.

2025 ஜூன் 4ம் திகதி பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நானயக்கார முன்னிலையில் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

அவரது உரையில், 12 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய இறக்காமப் பிரதேசம் ஆரம்பத்தில் தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாகக் கொண்ட அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்தில் இருந்த போதிலும், பின்னர் அறிவிப்பின்றி சிங்கள மொழி நீதிமன்ற மொழியாகப் பயன்படுகின்ற அம்பாறை நீதி நிர்வாக வலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலைமை காரணமாக 94% தமிழ் பேசும் மக்களை கொண்ட இறக்காம மக்கள், வழக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட நீதிமன்ற செயற்பாடுகளில் சிரமத்தை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் தெரியாத பொதுமக்கள் சிங்கள மொழியில் வழக்குத் தாக்கல் செய்யும் நிலையில் இருப்பது அடிப்படை உரிமை மீறல் எனவும் கூறினார்.

இறக்காமம் புவியியல் ரீதியாக அக்கரைப்பற்று மற்றும் அம்பாறை வலயங்களுக்கு இடையே அமைந்துள்ளதாலும், தமிழ் பேசும் மக்களுக்காக அது அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்தில் சேர்க்கப்படவேண்டும் என்றும் அல்லது தனியான நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், 2021ஆம் ஆண்டு நீதிமன்ற நியாயாதிக்க எல்லைகள் மீளாய்வு குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், இறக்காமம் அக்கரைப்பற்று நீதிமன்ற வலயத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, நீதி அமைச்சர் ஹர்சன நானயக்கார, இக்கேள்விக்கு பதிலளிக்கையில்,

அம்பாறை நீதிமன்றத்தினால் வழங்க வேண்டிய அறிக்கையைப் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு நீதியமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கினார்.