முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 20 வருட கடூழிய சிறைத்தண்டனையை எதிர்த்து, இன்று (ஜூன் 9) உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
2015 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக, அரசாங்க நிதியை முறையற்ற முறையில் பயன்படுத்தி 14,000 கெரம்போட்கள் மற்றும் 11,000 தாம் போர்ட்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்து, விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்தமை ஊடாக ரூ.53.1 மில்லியனை கடந்த நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு குற்றச்சாட்டு முன்வைத்தது.
இந்த வழக்கில், கடந்த மே 29ஆம் திகதி, மேல் நீதிமன்ற மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுமத்தால் அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இத்தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனவும், அவரின் சட்டத்தரணி சனத் விஜேவர்தன மூலம் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவில், பல முக்கியமான அம்சங்களை நீதிபதிகள் கருத்தில் கொள்ளவில்லை என்றும், தீர்ப்பில் தவறான புரிதல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த தண்டனை உத்தரவை ரத்துசெய்து, தங்களை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்க வேண்டுமெனவும், தம்மை முழுமையாக விடுதலை செய்யுமாறும் உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.