(அபூ உமர்)
மின்வழு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் மின்வலு அமைச்சர் திரு. குமார ஜயக்கொடி தலைமையில் அண்மையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, நீண்டகாலமாக அட்டாளைச்சேனையில் இயங்கி வருகின்ற மின்சார சபையின் உப அலுவலகத்தை டிப்போவாக தரம் உயர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில்….
அட்டாளைச்சேனையில் 1994 ம் ஆண்டில் இருந்து இலங்கை மின்சார சபையின் உப அலுவலகம் இயங்கி வருகின்றது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் அட்டாளைச்சேனை மின்சார சபை உப அலுவலகத்தின் அதிகாரிகளை வேறு மின்சார சபை அலுவலகத்தில் கடமை புரியுமாறு பணிப்புரை வழங்கப்பட்டது. அட்டாளைச்சேனை மின்சார உப அலுவலகத்தில் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் மட்டும் காரியாலயத்தில் சில காலம் கடமை புரிந்து வந்தார். இதன் பின் இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண பொது முகாமையாளரிடம் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக தெரிவித்தோம். இதன் பின் வேறு காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டிருந்த அட்டாளைச்சேனை மின்சார சபையின் உப அலுவலக உத்தியோகத்தர்களை மீண்டும் அட்டாளைச்சேனை உப அலுவலகத்திற்கு கடமைக்கு வந்துள்ளனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம், ஒலுவில் மீன்பிடித்துறைமுகம், தேசிய கல்விக் கல்லூரி, அரசாங்க ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை, கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி உட்பட பல முக்கிய அரச நிறுவனங்கள் அமைந்துள்ள நிலையில் அட்டாளைச்சேனை மின்சார சபையின் உப அலுவலகத்தை டிப்போவாக தரம் உயர்த்தும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை…..
அட்டாளைச்சேனை மின்சார சபையின் உப-அலுவலகப் பிரதேசம் 6100 ஹெக்டர் நிலப்பரப்புள்ள பிரதேசமாகும். அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி பிரதேசங்களில் 55 ஆயிரம் வீடுகள் அமைந்துள்ளன. எனவே அட்டாளைச்சேனை மின்சார சபையின் உப அலுவலகத்தை டிப்போவாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை மின்வழு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக மின்வழு அமைச்சர் குமார ஜயக்கொடி அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள மின்சார சபையின் உப-அலுவலகத்தை டிப்போவாக தரம் உயர்த்தும் செயற்பாடுகள் தொடர்பாக மின்வழு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால அறிக்கைகளை பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.