(அபூ உமர்)
அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சி சார்பில் மரச் சின்னத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் குறித்த சத்தியப்பிரமாணம் மற்றும் பைஅத் நிகழ்வு, நேற்று (21) அட்டாளைச்சேனை லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் கோலாகலமாய் நடைபெற்றது.
SLMC தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வின் ஏற்பாட்டை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை முன்னெடுத்தார்.
சிறப்பு அதிதிகளாக, கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஏறாவூர் நகர பிதா எம்.எஸ். நளீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், உலமாக்கள், உயர்பீட உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் நிகழ்வில் பங்கேற்று புதிய உறுப்பினர்களுக்கு உற்சாகத்தை வழங்கினர்.
புதிய உள்ளூராட்சி உறுப்பினர்கள், தங்கள் பதவிகளை மக்களின் நலனுக்காக திறம்பட பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுடன் நிகழ்வு இனிதாக நிறைவுபெற்றது.