(அபூ உமர்)
பொத்துவில் பிரதேச சபையின் புதிய தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எஸ். எம். எம். முஷர்ரப் இன்று (27.06.2025) நடைபெற்ற தேர்தலில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தவிசாளர் தேர்தல் கூட்டம், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முஷர்ரப் பரிந்துரைக்கப்பட்டார். எதிர்ப்பில்லாமல் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் அவர் தவிசாளராக தேர்வாகினார்.
அத்துடன், உப தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான ஏ. மாபிர் பரிந்துரைக்கப்பட்டதோடு, அவரும் ஒரே மனதோடு தெரிவு செய்யப்பட்டார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் தவிசாளரும் தற்போதைய பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ். வாசித், மாவட்ட செயற்குழு செயலாளர் ஏ.சி. சமால்தீன், மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த முடிவுகள், பொத்துவில் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேலாதிக்கத்தையும், அதன் உள்ளூராட்சி நிலைப்பாட்டையும் உறுதிப்படுத்துவதாகும்.