Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

தேனீயின் மூளையை கட்டுப்படுத்தும் சீனாவின் அதிசய தொழில்நுட்பம்

Posted on July 13, 2025 by Admin | 125 Views

சீனாவின் பீஜிங் தொழில்நுட்ப மைய விஞ்ஞானிகள் முன்னெடுத்துள்ள புதிய முயற்சி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனீக்களின் மூளையை கட்டுப்படுத்தும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம், அவற்றை மனிதக் கட்டளைகளுக்கு இணங்க செயல்பட வைக்கும் தொழில்நுட்பத்தை அவர்கள் வெற்றிகரமாக சோதித்துள்ளனர்.

‘சைபோர்க்’ தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு அமைகிறது. இதன் மூலம் உயிரினங்களை செயற்கையாக கட்டுப்படுத்தும் வகையில் சிறிய கருவிகள் உருவாக்கப்படுகின்றன. தற்போது சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கருவியின் எடை 74 மில்லிகிராம் மட்டுமே. இந்த கருவியில் உள்ள நுண் ஊசிகள், தேனீயின் நரம்பியல் மையமான மூளையை நேரடியாக கட்டுப்படுத்தக்கூடியவை என கூறப்படுகிறது.

இவ்வகை தேனீக்கள், ஆராய்ச்சியின் ஒரு கட்டத்தில் விஞ்ஞானிகள் வழங்கிய 90 சதவீத உத்தரவுகளையும் திறம்பட செயல்படுத்தியுள்ளன. மேலும், அவற்றின் இயக்கங்களை தொலைதூரத்தில் இருந்தே கண்காணிக்கக்கூடிய வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விஞ்ஞானிகள் கூறியதாவது, “இத்தகைய தேனீக்கள் இயற்கை பேரிடர்கள், தீவிரவாதம் போன்ற சூழ்நிலைகளில் மனிதர்கள் உடனடியாக செல்ல முடியாத இடங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள சூழ்நிலைகளைத் தெரிந்துகொள்ள பயன்படலாம்,” என தெரிவித்தனர்.

இதேநேரத்தில், தேனீக்கள் இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு பணிகளிலும் பயன்படும் என்ற நம்பிக்கையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

இந்த புதிய முயற்சி, உலக அளவில் உயிரியல் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறைகளில் ஒரு புரட்சியாகவே பார்க்கப்படுகிறது.