மொனராகலை மாவட்டத்தில் இடம்பெற்ற சோகமான சம்பவம், உள்ளூர் மக்களை பெரிதும் கலங்கடித்துள்ளது. நக்கல்ல 16வது மைல் பகுதியில் வசித்து வந்த 13 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் தாய், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தை விட்டு வெளியேறிய நிலையில், மாணவி தனது தந்தை மற்றும் பாட்டியுடன் வாழ்ந்து வந்தார்.
அப்பகுதியில் உள்ள இளைஞனுடன் காதலில் ஈடுபட்டிருந்த மாணவிக்கு, தனது காதலன் கைப்பேசி ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார். இந்நிகழ்வைத் தந்தை அறிந்தபோது, மகளுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்ததுடன், அந்த கைப்பேசியை தந்தை உடைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி, படிப்பதாக கூறி தனது அறையில் தனியாக இருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், பாட்டி சந்தேகத்தில் கதவை தட்டியுள்ளார். மாணவி பதிலளிக்காத நிலையில், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மாணவி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
வெகுவேகமாக மொனராகலை மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
அறையில் இருந்து மாணவி எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்