(குரு சிஷயன்)
அக்கறைப்பற்று கல்வி வலயத்தில் அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திற்குள் அமைந்துள்ள ஆலங்குளம் ரஹ்மானிய வித்தியாலயம், 2025ஆம் ஆண்டுக்கான வலயமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது.
தரம் 10 மற்றும் 11 இல் கல்வி பயிலும் மூன்று மாணவிகள், இப்பாடசாலையிலிருந்து மாகாண மட்ட போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தரம் 10 இல் பயிலும் ஹமாமா என்ற மாணவி மாகாண மட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்து, தேசிய போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். இது பாடசாலையின் வரலாற்றில் புதிய ஒரு முக்கியச் சாதனையாகக் கருதப்படுகிறது.
2025ஆம் ஆண்டுக்காக தேசிய ரீதியாக அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு மாணவி இப்பாடசாலையைச் சேர்ந்த மாணவி என்பதால் ஆலங்குளம் மண்ணும் அட்டாளைச்சேனை கல்விக் கோட்டமும் பெருமை அடைகிறது.
இவ் வெற்றிக்கு பின்புலமாக பாடசாலையின் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியரும் சமூக விஞ்ஞான பாட இணைப்பாளருமான இம்ரான் ஹுசைன், தூய எண்ணத்துடன் தூர நோக்கான சிந்தனையுடன் பாடசாலையை வழி நடாத்தும் அதிபர் கே.எல்.எம். முனாஸ், தரம் 10,11 வலயத்திற்கு பொறுப்பான ஆசிரியர் பி.எம்.ஆரிப் உள்ளிட்ட ஏனைய ஆசிரியர்களினதும் அர்ப்பணிப்பும் குறிப்பிடத்தக்கது.
அப்பாடசாலையின் கல்விச் சமூகமும், அட்டாளைச்சேனை கல்விக் கோட்டமும் இம்மாணவர்களின் வெற்றிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளன. எதிர்வரும் தேசிய போட்டிகளில் இவர்கள் மேலும் சாதனை படைக்க எமது செய்தித் தளம் சார்பாக வாழ்த்துகிறோம்.