கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் 2025.08.25ம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் கைத்தொழில் மற்றும் உற்பத்தித் துறைகளின் பங்களிப்பை அதிகரிப்பது, ஏற்றுமதி வருவாயை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன் அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் செயல்படுத்தி வரும் திட்டங்கள், அவற்றில் எழுந்துள்ள சவால்கள், சிக்கல்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைக் கடன்களில் எழுந்துள்ள சிக்கல்களும் இங்கு பேசப்பட்டன. அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க கைத்தொழில் அமைச்சு மற்றும் நிதி அமைச்சு இணைந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
செவனகல மற்றும் பெல்வத்த சீனித் தொழிற்சாலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய அனைத்து நிலுவைத் தொகைகளையும் விரைவாக வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய புதிய சேவைகளை ஆராய்ந்து, அவற்றை நிறைவேற்றும் வகையில் திட்டங்களைத் தயாரிக்கவும் கைத்தொழில் அமைச்சு அறிவுறுத்தப்பட்டுள்ளது.