(அபூ உமர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பெருந்தலைவர், மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்வு நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெற்றது.
இந்நிகழ்வை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டமுதுமாணி கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் மாண்புமிகு ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் சிறப்பு அதிதியாக பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தார்.
பல்வேறு அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு அஷ்ரப் அவர்களின் சமூக மற்றும் அரசியல் பங்களிப்பை நினைவு கூர்ந்தனர்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக முஸ்லிம் முழக்கம் ஆசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான மறைந்த ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களின் “ஓயாத புயலும் சாயாத மரமும்” என்ற நூல், பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா அவர்களால் ஆய்வுடன் வெளியிடப்பட்டது.
அந்த நூலின் பிரதியை கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் கௌரவ அதாஉல்லா அவர்களுக்கு வழங்கிய தருணம் நிகழ்வின் சிறப்பை உயர்த்தியது.
நினைவுப் பேருரை நிகழ்த்துவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தது இந் நிகழ்வின் தனித்துவ அம்சமாக அமைந்தது.
கால் நூற்றாண்டு கடந்தும் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் அரசியல் பணி மற்றும் சமூக பங்களிப்பு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஆணிவேராக நிலைத்து நிற்கின்றது என்பதை இந்நிகழ்வு மறுபடியும் வெளிப்படுத்தியது.