(அபூ உமர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25ஆவது ஆண்டு கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆப் பிரார்த்தனை நேற்று (16.09.2025) காலை 6.30 மணிக்கு அட்டாளைச்சேனை ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில், மத்திய குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதில் கட்சியின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
மர்ஹும் அஷ்ரப் அவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக விசேட கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றன. அட்டாளைச்சேனை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி என்.ரி. நசீர் (ISA) அவர்கள் விசேட துஆவை நிகழ்த்தினார். இதன்போது, தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பெருந் தலைவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்வில், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். வாஸித், பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், முன்னாள் பிரதி மேயர் மற்றும் கட்சியின் பொருளாளர் றஹ்மத் மன்சூர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் (MMC), மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்டீன், சூரா சபை செயலாளர் யு.எம். வாஹித் (ஓய்வு ADE), அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், உதவித் தவிசாளர் எம்.எப். நஜீத், மத்திய குழுத் தலைவர் எஸ்.எல். ஹலீம், பிரதேச சபை உறுப்பினர்கள் ஐ.எல். அஸ்வர் சாலி, றியா மசூர், ஏ.சி. நியாஸ், ஏ.எல். பாயிஸ் (ADE), எஸ்.எம். றியாஸ், அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினர் என்.டி. அஸ்மத் முகமத், தொழிலதிபர் ஏ.கே. அமீர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள், கட்சித் தலைவர்கள், ஆதரவாளர்கள், போராளிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.