(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
உள்ளூராட்சி வாரத்தின் ஓர் அங்கமாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் “வருமானம் மற்றும் மேம்பாட்டுத் தினம்” நேற்று 18 (வியாழக்கிழமை) கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் முக்கிய அம்சமாக அட்டாளைச்சேனை பிரதேச ஆளுகைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு வருடாந்த வியாபார அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. இதுவரை வியாபார அனுமதிப்பத்திரம் பெறாதவர்கள், காலாவதியான வியாபார அனுமதிப்பத்திரங்களை வைத்திருந்தவர்கள் மற்றும் வருமான வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த வர்த்தகர்கள் குறித்தும் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையால் வர்த்தக நடவடிக்கைகள் சட்டப்படி ஒழுங்குபடுத்தப்படுவதோடு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் நம்பகத்தன்மையுடன் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது. உரிய அனுமதியுடன் இயங்கும் நிலையங்கள், சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், பொதுமக்களுக்கு தரமான சேவைகள் கிடைப்பதற்கு வழிவகுக்கிறது. மேலும், பிரதேச சபையின் வருமானம் உயர்வதால் பிரதேச சபையினால் பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகளை மேம்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
இந் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் எம்.ஏ.அன்சில், ஐ.ஏ. சிறாஜ், ஐ.எல். அஸ்வர் சாலிஹ், ஏ.சி. நியாஸ்,ஏ.எல்.பாயிஸ், வருமானப் பரிசோதகர்,நிதி உதவியாளர், அத்துடன் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.