Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 17, 2026

கர்ப்ப காலத்தில் வெண்மைப்படுத்தும் கிரீம்களை பயன்படுத்துவது குழந்தைக்கு ஆபத்தா?

Posted on September 19, 2025 by Admin | 382 Views

கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகவும் முக்கியமான கட்டமாகும். இக்காலத்தில் தாய் எடுத்துக் கொள்ளும் உணவு, பழக்கவழக்கம், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் நேரடியாக கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. ஆனால், பல கர்ப்பிணிப் பெண்கள் சருமத்தை வெண்மையாக்கும் ஆசையில் பயன்படுத்தும் கிரீம்கள், குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்தை பெரும் ஆபத்துக்கு உள்ளாக்குவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் அழகியவண்ண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்ப்ப காலத்தில் இவ்வகை கிரீம்களை பயன்படுத்துவதால், குழந்தையின் மூளை வளர்ச்சி தடைபடுதல், நினைவாற்றல் குறைவு, நடைப்பயிற்சியில் சிரமம் போன்ற பல சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளது. பிறந்த பின் குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதற்காக தாயின் ஒவ்வொரு தேர்வும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இது நினைவூட்டுகிறது.

வெண்மைப்படுத்தும் கிரீம்களில் அதிகமாக காணப்படும் பாதரசம் (Mercury) என்பது மிக ஆபத்தான இரசாயனமாகும். இதன் காரணமாகவே தோலில் தற்காலிக வெண்மை தோன்றினாலும், அது உடலின் நரம்பு மண்டலம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களின் உடலில் இரத்த ஓட்டம் வேகமாக இருக்கும் நிலையில், கிரீம்களில் உள்ள கன உலோகங்கள் விரைவில் உடலுக்குள் சென்று, குழந்தையின் வளர்ச்சியை பாழ்படுத்துகின்றன.

அதிக அளவு பாதரசம் கொண்டிருப்பதால், இத்தகைய கிரீம்கள் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அதாவது, சந்தையில் விற்பனையாகும் பல வெண்மைப்படுத்தும் கிரீம்கள், சட்டபூர்வமாக சோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது கவலைக்குரியது.

சுகாதார நிபுணர்கள், “கர்ப்ப காலத்தில் தாயின் அழகு சாதனத்தை விட, குழந்தையின் ஆரோக்கியம் முதன்மை. தற்காலிக வெண்மை பெறும் ஆசையில் குழந்தையின் எதிர்காலத்தை ஆபத்துக்கு உள்ளாக்க வேண்டாம்” என அறிவுறுத்துகின்றனர்.

கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடல் மற்றும் குழந்தையின் நலனை காக்க, இயற்கையான உணவுகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையை மட்டுமே நம்பிக்கையாக பின்பற்ற வேண்டும்.