‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றிருந்தும் இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகள் தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பயனாளிகளின் பெயர் பட்டியல் தற்போது பிரதேச செயலகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ‘அஸ்வெசும’ இரண்டாம் கட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் தமது பிரதேச செயலகத்திற்குச் சென்று வங்கிக் கணக்கு திறப்பதற்கான கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அந்தக் கடிதத்தை மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி அல்லது பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் தமக்கு வசதியான கிளையில் சமர்ப்பித்து ‘அஸ்வெசும’ பயனாளி வங்கிக் கணக்கொன்றைத் திறக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத தகுதியுடைய பயனாளிகள் விரைவில் கணக்குகளைத் திறந்து அவற்றின் விபரங்களை தமது பிரதேச செயலகங்களுக்கு வழங்க வேண்டும் என நலன்புரி நன்மைகள் சபை வலியுறுத்தியுள்ளது.