ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் இன்றைய (14) பாராளுமன்ற உரையில், புத்தளத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக இருக்கின்ற வைத்தியசாலை மற்றும் அருவக்காலு குப்பை திட்டம் தொடர்பாக ஆற்றிய உரையை தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற உரையில், புத்தளத்தின் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் சுட்டிக் காட்டி உரையாற்றிய போது, கெளரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களும் பாராளுமன்றத்திலேயே இருந்துள்ளார்.
பின்னர், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்களும், ஹிஸ்புல்லாஹ் அவர்களும் பகல் உணவுக்காக பாராளுமன்ற சிற்றூண்டிச்சாலைக்கு சென்ற போது, அங்கே பகல் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்களையும்,பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களையும் அருகே அழைத்து ஹிஸ்புல்லாஹ் அவர்களின் புத்தளம் சம்மந்தமான உரையை பாராட்டியுள்ளார்.
தான் புத்தளம் சென்ற போது அங்கே அவர்களுக்கு வைத்தியசாலை தொடர்பாக வாக்குறுதி வழங்கியதாகவும், அதனை அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்கள் “ஆம் அது எங்களுக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கின்றது, அதனை தரமுயர்த்தி தருவதாக நீங்களும் வாக்குறுதி வழங்கினீர்கள், இன்னும் பிரதமர் அவர்களும் வந்தபோது வாக்குறுதி வழங்கினார், எனவே அதனை செய்து தாருங்கள்” என கேட்டுக்கொண்ட போது,
அங்கே இருந்த சுகாதார அமைச்சரை ஜனாதிபதி அவர்கள் அழைத்து “இன்னும் 6 மாதங்களுக்குள் புத்தளம் தல வைத்தியசாலை தரமுயர்த்தப்பட வேண்டும், அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதனை உடனடியாக செய்யுங்கள் என உத்தரவிட்ட போது, இல்லை என ஏதோ காரணம் சொல்ல சுகாதார அமைச்சர் முற்பட்ட போது, எதுவும் சொல்லாமல் 6மாதங்களுக்குள் இது நடக்க வேண்டும், நிதி போதாவிட்டால் சொல்லுங்கள் அதனை நான் தருகின்றேன் எனவும் ஜனாதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
எனவே ஹிஸ்புல்லாஹ் அவர்களின் இன்றைய பாராளுமன்ற உரையின் மூலமும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்களின் தொடர் முயற்சிகளாலும் புத்தளம் தல வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட இருக்கின்றது.