“டித்வா” புயல் நேற்று (29) இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தில், அகலாங்கு 10.7°N மற்றும் நெட்டாங்கு 80.6°E இற்குநெருக்கமாக மையநிலையடைந்தது. புயல் தற்போது வடக்குத் திசையில் நகர்ந்து வருவதுடன் அடுத்த 24 மணிநேரங்களில் இந்தியாவின் தமிழ்நாடு கடற்கரைக்கு இணையாக நகரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த முன்னேற்றத்தையடுத்து கடந்த சில நாட்களாக நீடித்து வந்த மழையுடனான வானிலை இன்று (30) முதல் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 50–60 கிலோமீட்டர் வரை வேகமுள்ள பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.