அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் Dialog மற்றும் Airtel தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக ஒரு முறைப்பாடு பதிவாகியுள்ளது.
முறையிட்டவர்களின் விளக்கத்தின்படி, தொலைத்தொடர்பு சேவைகளைப் பெறுவதற்காக முன்பணம் செலுத்தியிருந்த போதிலும் கடந்த 27ஆம் திகதி முதல் இன்றுவரை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், எவருக்கும் தகவல் வழங்காமல் சேவையை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் சேவை வழங்காத நாட்களுக்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திடீரென தொலைத்தொடர்பு வசதி நிறுத்தப்பட்டதன் காரணமாக தொழில் தொடர்பான நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டதாகவும் நாட்டில் பேரிடர் நிலை நிலவிய வேளையிலும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் நலன்களை அறிய முடியாத நிலை ஏற்பட்டதாகவும் முறையிட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் மனஉளைச்சல் ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த ஏமாற்று மற்றும் மோசடி செயல்கள் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு தனிப்பட்ட ஒருவரின் சார்பானதல்லாமல் பாதிக்கப்பட்ட அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.