முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று 2019 ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்படும் மாகந்துரே மதுஷ் தொடர்பான விசாரணையின் போது மீட்கப்பட்ட சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட துப்பாக்கியின் இலக்க எண்களை ஆய்வு செய்ததில் அது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி எவ்வாறு அவரது கட்டுப்பாட்டிலிருந்து காணாமல் போனது என்பது தொடர்பில் திருப்திகரமான விளக்கத்தை அவர் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே மேலதிக விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.