ஹட்டன் – பொகவந்தலாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் பணியை இடைநீக்கம் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொலிஸ் விடுதியில் தங்கியிருந்த இந்த இரு உத்தியோகத்தர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்ததையடுத்து ஒருவர் மற்றவரை தங்கியிருந்த இடத்திலேயே கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்களுடன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.