(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றம் கடந்த 14 வருடங்களாக புனித ரமழான் மாதத்தில் தொடர்ச்சியான ஹதீஸ் மஜ்லீஸ் நிகழ்வுகளை நடத்தி வருகின்றது. இதற்கமைவாக இவ்வருடம் 15வது வருடமாக ஹதீஸ் மஜ்லீஸ் நிகழ்வினை முன்னிட்டு அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரங்களை சுத்தப்படுத்தும் சிரமதான நிகழ்வு க்ளீன் ஶ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.ஏ.அப்கர் தலைமையில் அல் இபாதா கலாசார மன்றத்தின் சிரமதான குழுத் தலைவர் ஓ.எல்.எம்.றிஸ்வான் அதிபரின் ஒருங்கிணைப்பில் 2026.02.14ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.
டெங்கு நுளம்புகள் பெருகக்கூடியதாக அடையாளங்காணப்பட்ட இடங்கள், பொது மக்களினால் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றும் பணிகளும் இடம்பெற்றதுடன் ஆற்றங்கரையோர சூழலை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் அல் இபாதா கலாசார மன்றத்தின் ஸ்தாபகரும், போசகருமான் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அக்கறைப்பற்று நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கரையோர பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி, அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், அல் இபாதா கலாசார மன்றத்தின் உறுப்பினர்கள், அட்டாளைச்சேனை கோணாவத்தை அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள், அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எச்.றஸ்மி, அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம், அல் அர்ஹம் வித்தியாலயங்களின் அதிபர்கள், மாணவர்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், உலமாக்கள், கல்விமான்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

