2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதம் உயர்த்துவதற்கான இலங்கை மின்சார சபை முன்மொழிவுக்கு பல தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
நிலக்கரி கொள்முதல் தொடர்பான மோசடி காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தை பொதுமக்கள் மீது சுமத்தும் நோக்கில், மின்சாரக் கட்டண உயர்வை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரச் சுமை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வருடத்திற்கு நான்கு முறை மேற்கொள்ளப்படும் கட்டணத் திருத்த நடைமுறையின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்காக 11.57 சதவீத உயர்வை மின்சார சபை முன்மொழிந்திருந்தது. எனினும் உரிய காலத்திற்குள் முறையான திருத்த யோசனையை சமர்ப்பிக்காத காரணத்தால் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கு அனுமதி வழங்க மறுத்தது.
அதேவேளை 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான கட்டணத் திருத்த யோசனையை பிப்ரவரி 13 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு ஆணைக்குழு அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை அமுல்படுத்தும் வகையில் 13.56 சதவீத கட்டண உயர்வை கோரி மின்சார சபை புதிய யோசனையை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
குறித்த யோசனையை விரிவாக பரிசீலித்த பின்னர் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.