(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
புனித ரமழான் காலத்தை முன்னிட்டு அட்டளைச்சேனை பிரதேச தேநீர் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் தனியார் வகுப்புகளை நடத்தும் நிறுவனங்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரினால் வழங்கப்பட்டுள்ளது.
தேநீர் கடைகள் மற்றும் ஹோட்டல்கள் தொடர்பாக:
1. பிற்பகல் 3.00 மணிக்கு முன்பாக கடைகளைத் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
2. சுத்தம் மற்றும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து, தரமான உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். மேலும், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் அறிவுறுத்தும் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
3. பொருட்கள் நியாயமான மற்றும் கணிசமான விலைகளில் விற்பனை செய்யப்பட வேண்டும்.
தனியார் வகுப்புகளை நடத்தும் நிறுவனங்கள் தொடர்பாக:
1. தரம் 10க்கு உட்பட்ட மாணவர்களுக்கான வகுப்புகள் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
2. க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) மாணவர்களுக்கான வகுப்புகள் பிற்பகல் 4.00 மணிக்குள் நிறைவுபெறுமாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
3. இரவு வேளைகளில் எக்காரணம் கொண்டும் வகுப்புகள் நடத்தப்படக்கூடாது.
4. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனியார் வகுப்புகள் நடத்தும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.
இவ் உத்தரவுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பிரதேச சபை வலியுறுத்தியுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட தேநீர் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் தனியார் வகுப்புகள் நடத்தும் நிறுவனங்களுக்கு இக்கட்டளைகள் நேரடியாக விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.