இலங்கையில் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களிடையே பெருங்குடல் மற்றும் நேர்க்குடல் புற்றுநோய்களின் ஏற்பாடு அதிகரித்து வருவது குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர கவலை வெளியிட்டுள்ளனர். உலகளவில் பதிவாகி வரும் நிலையின் தொடர்ச்சியாக இந்த நிலைமை காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்னதாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அதிகமாகக் கண்டறியப்பட்ட இந்த நோய் அண்மைக் கால புள்ளிவிபரங்களின்படி இளம் வயதினரிடையே கணிசமான உயர்வைக் காட்டுகிறது. இது பொதுச் சுகாதாரத் துறைக்கு புதிய சவாலாக மாறியுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் சமூக மருத்துவ விசேட நிபுணர் டாக்டர் ஹசரலி பெர்னாண்டோ இந்த மாற்றம் கவனிக்கத்தக்கதொன்றாக இருப்பதுடன் உடனடி தலையீடு தேவைப்படுவதாக தெரிவித்தார்.
நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல், பரிசோதனைகளை முறையாக மேற்கொள்ளுதல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை விரிவுபடுத்துதல் ஆகியவை கட்டாயமான நடவடிக்கைகளாகும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும் மலச்சிக்கல் மாற்றம், இரத்தப்போக்கு, நீண்டகால வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். ஆரம்ப நிலையில் நோயைக் கண்டறிந்தால் சிகிச்சை பலன்கள் அதிகரிக்கும் என்பதும் நிபுணர்களின் கருத்தாகும்.