(ஆலங்குளம் செய்தியாளர்-ஆசிக்)
அம்பாறை மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளத்தினால் சேதமடைந்த தீகவாபி – ஆலங்குளம் விவசாய வீதியும், வெள்ளக்கல் தோட்ட தரைப்பாலமும் விரைவில் புனரமைக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் பதில் வழங்கினார்.
கௌரவ சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்ற அதர்வு நேற்று (03.03.2026) நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரிடம் வாய்மூல கேள்வி எழுப்பினார்.
அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் நிர்வாகப் பிரிவுக்குட்பட்ட தீகவாபி – ஆலங்குளம் விவசாய வீதியும், வெள்ளக்கல் தோட்ட தரைப்பாலமும் 2022 வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந் நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அன்றாடப் போக்குவரத்து மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்்அவற்றை உடனடியாகப் புனரமைக்க வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர், குறித்த பணிகள் தொடர்பான நிர்வாக நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், 2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டத்தில் தீகவாபி – ஆலங்குளம் விவசாய வீதி உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை முன்னிறுத்தி இதற்கு முன்பும் எழுத்து மூலமாக கேள்வி எழுப்பியிருந்த எம்.எஸ். உதுமாலெப்பை புனரமைப்பு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதற்கு அமைச்சின் அதிகாரிகள், அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.