நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தேவையற்ற அச்சத்தால் மக்கள் வரிசைகளை உருவாக்க வேண்டாம் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் எரிபொருள் விநியோகத்தை சீராக மேற்கொள்ள அரசு அறிமுகப்படுத்தியுள்ள மேலாண்மை முறைக்கு பொதுமக்கள் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
உலகளாவிய அரசியல் நெருக்கடிகள் நிலவி வரும் சூழ்நிலையில் நாட்டின் எரிபொருள் கையிருப்பை பாதுகாத்து மக்களுக்கு தடையின்றி எரிபொருள் வழங்கும் நோக்கில் QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அருகில் தேவையற்ற நெரிசலை தவிர்க்கும் வகையில் QR குறியீட்டின் அடிப்படையில் எரிபொருள் வழங்கும் திட்டம் வார இறுதி நாட்களிலிருந்து நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு வாகன உரிமை மாற்றம் மற்றும் மொபைல் தொலைபேசி எண் தொடர்பான முறைமையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் முறைமையிலிருந்து வாகனங்களை நீக்கும் வசதியும் தற்போது ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அனைத்து தொழில்நுட்ப தடைகளும் நாளை காலை வரை நீக்கப்பட்டு, பொதுமக்கள் சேவையை எளிதாகப் பெற முடியும் என்றும் எரங்க வீரரத்ன மேலும் தெரிவித்தார்.