சவுதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தில் அமைந்துள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது சமீபத்தில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து தேவையான சூழலில் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கத் தமக்கு உரிமை உள்ளதாக சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் தெரிவித்துள்ளார்.
ரியாத்தில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய அவர் இத்தகைய தாக்குதல்கள் மூலம் எந்தவித நன்மையும் கிடைக்காது என்பதை ஈரான் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தனது தவறான மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் ஈரான் அண்டை நாடுகளுடன் உரையாடலை முன்னெடுக்காமல் அவர்கள்மீது அழுத்தம் செலுத்தும் அணுகுமுறையைத் தேர்வு செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த அணுகுமுறை வெற்றியளிக்காது என்பதுடன் அரசியல் மற்றும் நெறிமுறை ரீதியாக ஈரானுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இளவரசர் பைசல் எச்சரித்தார்.