நிலவும் விசேட சூழ்நிலையை முன்னிட்டு வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புகளையும் நடத்தாமல் இருக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது கட்டாய உத்தரவு அல்ல ஆனால் தற்போதைய சூழ்நிலையை சமாளிக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையாகும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தி அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக அரசாங்கம் அண்மையில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மறுஅறிவித்தல் வரை புதன்கிழமைகள் அரச அலுவலகங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை கல்வித்துறையிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அரசு, அரைஅரசு, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள், பாலர் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து அரச நிகழ்வுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் துறைக்கு இயன்றவரை இணையவழி பணிமுறைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் சுகாதாரம், வங்கி, மின்சாரம், நீர், துறைமுகம், சுங்கம் மற்றும் விமான சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் இந்த விடுமுறை முறையிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பாகவே்புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளைத் தவிர்க்குமாறு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.