ஈரானை குறிவைத்து தரைவழி இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் இந்த நடவடிக்கைக்கான திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் இதுகுறித்து The Washington Post பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த அறிக்கையின் படி இந்த இராணுவ நடவடிக்கை பல வாரங்கள் நீடிக்கக்கூடிய பரந்தளவிலான ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. தேவையான போர்த் திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
எனினும் இந் நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி இறுதி அனுமதி வழங்கியுள்ளாரா என்பது குறித்து இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதற்கு முன்னர் சுமார் 4,000 மெரைன் படைவீரர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும் அமெரிக்காவின் 82ஆவது வான்வழிப் படையின் பாராசூட் படைவீரர்களும் சாத்தியமான நடவடிக்கைக்காக தயார்நிலையிலுள்ளதாக அந்தச் செய்தி மேலும் குறிப்பிடுகிறது.