Top News
| நீர் வெட்டு தொடர்பாக வெளியான அறிவிப்பு | | மின்சாரக் கட்டணம் 25% வரை உயர்வு | | பாடசாலையில் நடைபெற்ற கைகலப்பில் மாணவர்கள் கைது |
Mar 31, 2026

நீர் வெட்டு தொடர்பாக வெளியான அறிவிப்பு

Posted on March 30, 2026 by Admin | 132 Views

நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை தொடர்ந்தால் எதிர்வரும் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் தினசரி சில மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அச்சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தற்போதைக்கு எந்தவொரு நீர் வெட்டும் அமுல்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார். இருப்பினும், நிலவும் வறட்சி நிலை நீடித்தால் நாளெங்கும் தடையின்றி நீர் வழங்குவது சிரமமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அம்பத்தலை உள்ளிட்ட முக்கிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தித் திறன் இதுவரை பாதிக்கப்படாத நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார். எனினும் உயரமான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் மட்டுமே நீர் கிடைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறைந்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பவுசர்கள் மூலம் நீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார்.

இதேவேளை எதிர்வரும் நாட்களில் மழை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அதுவரை பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.