(அபூ உமர்)
சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க இடமாக விளங்கும் பொத்துவில் அருகிலுள்ள அருகம்பே பகுதியில் பாதுகாப்பு அதிகரித்துள்ளதனால், அங்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து வருவதாகவும், இது உள்ளூர் மக்களிடையே பல பிரச்சனைகளை உருவாக்கி வருவதாகவும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கவலை வெளியிட்டுள்ளார்.
2025 ஜூன் 4ம் திகதி, பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா மற்றும் தூதரக செயற்பாடுகள் தொடர்பான விசேட கூட்டத்தில், அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
உயர் பாதுகாப்பு நிலை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை அல்லது தடுமாற்றம் ஏற்படுவது, அந்தப் பகுதியின் பொருளாதாரம் மற்றும் சமூக நலனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எம்.பி. உதுமாலெப்பை சுட்டிக்காட்டினார்.
“தேசிய பாதுகாப்பு முக்கியமானது, ஆனால் அதே நேரத்தில் மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழும் சூழலும் உறுதி செய்யப்பட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
இவ்விடயத்திற்கு பதிலளித்த சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க, அருகம்பே பகுதியில் நிலவும் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.