மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய விவசாயியும் நான்கு பிள்ளைகளின் தந்தையுமான வைரமுத்து நவராசா என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
வழக்கம்போல வேளாண்மை காவல் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை (14) இரவு வீட்டை விட்டு வெளியேறிய அவர் திங்கட்கிழமை (15) காலை வீடு திரும்பியுள்ளார். பின்னர் மனைவியிடம் காலை உணவாக பிட்டு தயாரித்து தருமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அது பின்னர் கடும் சண்டையாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் காலை 11.30 மணியளவில் மனைவி கத்தியால் கணவரின் கழுத்தை பதம்பார்த்து கோடாரியால் மண்டையை பிளந்ததனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்திற்குப் பின்னர் குறித்த பெண் கத்தியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்ததாகவும் இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.