(பொத்துவில் செய்தியாளர் ஹுதா)
பொத்துவில் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் பௌதீக குறைபாடுகளை நேரில் ஆய்வு செய்வதற்காக நேற்று (22.12.2025) திங்கட்கிழமை அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் விஷேட கள விஜயம் மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது பொத்துவில் ஒஸ்மானியா கனிஷ்ட பாடசாலை, நூறானியா வித்தியாலயம், தாருல் பலாஹ் முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் அல்-பஹ்ரியா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நிலவும் பௌதீக குறைபாடுகள் குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் சேதமடைந்த பொத்துவில் ஒஸ்மானியா கனிஷ்ட பாடசாலைக்கு தற்காலிக கட்டுமானப் பணிகளுக்காக கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கிணங்க அவசரமாக 01 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிர்மாணப் பணிகள் தொடர்பாக பொத்துவில் கோட்டக்கல்விப்பணிப்பாளர், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமூகத்துடன் கலந்துரையாடப்பட்டதுடன், மேலதிகமாக 1.5 மில்லியன் ரூபாய் நிதியைப் பெற்றுக்கொண்டு தற்காலிக கட்டிடத்தை புனரமைத்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை உரிய தரப்புகளுடன் இணைந்து மேற்கொள்வதாக கௌரவ எம்.பி. உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் பொத்துவில் கோட்டக்கல்விப்பணிப்பாளர், சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பொத்துவில் தொகுதி அமைப்பாளர் தோழர் ரவி, பிரதேச அமைப்பாளர் தோழர் ஆதம் சலீம், பிரதேச சபை உறுப்பினர்கள் மஃரூப், புனிதன் மற்றும் பொத்துவில் பிரதேச செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



