ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கிண்ணத்தை வென்றதையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க இலட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பெங்களூரு காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பெங்களூரு காவல் ஆணையர் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
RCB அணியின் நிர்வாகி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழா ஏற்பாடு செய்தது மாநில அரசா அல்லது RCB நிர்வாகமா என கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்குப் பதிலளித்த கர்நாடக கிரிக்கெட் சங்கம், விழாவை மாநில அரசே ஏற்பாடு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அனைத்து சர்ச்சைகளுக்கு மத்தியில், வெற்றி விழாவிற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் கூட,RCB நிர்வாகம், தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் பேரணிக்கு ரசிகர்களை அழைத்திருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலளித்த BCCI செயலாளர் தேவஜித் சைகியா, “இந்த விவகாரம் தனிப்பட்டதாக இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டின் ஒழுங்குக்கு BCCI பொறுப்பாக இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தவிர்ப்போம்” என்றார்.
விசாரணையின் முடிவில் RCB மீது தவறு நிரூபிக்கப்பட்டால், ஒரு ஆண்டு கால பிஎஸ்ஐஐ தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், IPL நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் RCB கணக்கை பின்தொடர்வதை நிறுத்தியதாக பரவும் தகவல் பொய்யானது என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.
முன்னதாக சூதாட்ட விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டதை நினைவூட்டும் வகையில் இந்த சம்பவம் குறிப்பிடப்படுகிறது