ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவும் பிணைப்பு மற்றும் சர்வதேச சூழ்நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ள போதும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு போதுமான எரிபொருள் கையிலுள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது, அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது நிலவும் இருப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இறக்குமதி திட்டங்களை காரணமாகக் கொண்டு, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லையெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“இலங்கைக்கு தேவையான எரிபொருள் மலேசியா, சிங்கப்பூர், ஓமான், மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து தொடர்ந்து கிடைத்து வருகிறது. இந்த நாடுகள் தற்போதைய பிரச்சனைகளால் நேரடியாக பாதிக்கப்படவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், லங்கா ஐஓசி, சினோபெக் மற்றும் ஆர்.எம் பார்க் உள்ளிட்ட முக்கிய விநியோகஸ்தர்கள் தடையின்றி விநியோகத்தை மேற்கொண்டு வருவதாகவும், மசகு எண்ணெய் இறக்குமதிகள் நிலையான நிலையில் உள்ளதாகவும் ஜனக ராஜகருணா தெரிவித்தார். ஆண்டுக்கான எரிபொருள் கொள்வனவு கட்டளைகளும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
இதனையடுத்து, சமூக ஊடகங்களில் பரவும் எரிபொருள் பற்றாக்குறை அல்லது விலை உயர்வு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
சர்வதேச சந்தையில் தற்போது எரிபொருள் விலை நிலையாக உள்ளதாகவும், அடுத்த மாதங்களில் விலை உயர வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.