Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடையா? மத்திய வங்கி விளக்கம்

Posted on July 8, 2025 by Admin | 119 Views

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி இன்று தெளிவுபடுத்தியுள்ளது.

சில ஊடகங்களில் வெளியான செய்திகளில், மத்திய வங்கி வாகன இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நிதி அமைச்சுடன் தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தள்ளுபடி செய்து, வாகன இறக்குமதியை குறைப்பதற்காக நிதி அமைச்சுடன் எவ்வித கடிதப் பரிமாற்றம் அல்லது ஆலோசனையும் நடைபெறவில்லை என்று மத்திய வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு முதலாக கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தனியாருக்கான வாகன இறக்குமதி, சுமார் 5 வருடங்களுக்கு பின்னர், 2025 பெப்ரவரி 1ஆம் திகதியிலிருந்து மீண்டும் அனுமதிக்கப்பட்டது.

அதன்படி, பெப்ரவரி முதல் ஜூன் வரையிலான ஐந்து மாதங்களில், 18,000க்கும் அதிகமான மோட்டார் வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 13,614 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இக்காலகட்டத்தில், வாகன இறக்குமதிக்காக சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான கடன் கடிதங்கள் (Letters of Credit) திறக்கப்பட்டுள்ளன. இதில் இதுவரை 450 மில்லியன் டொலர்களுக்கான வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலைகள் வன்மையாக உயர்ந்துள்ளன

இறக்குமதியான வாகனங்களின் சந்தை விலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இலங்கையில் வாகனங்களின் விலை பெரிதும் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

  • Suzuki Wagon R FX-S: ஜப்பானில் ரூ. 36 லட்சம் மதிப்புள்ள வாகனத்திற்கு, இலங்கையில் ரூ. 38 லட்சம் வரி விதிக்கப்பட்டு, இறக்குமதி மதிப்பு ரூ. 74 லட்சமாக உயர்கிறது. இது இறுதியில் சுமார் ரூ. 86 லட்சம் வரை விற்பனையாகிறது.
  • Toyota Raize 1200cc Hybrid: ஜப்பானில் ரூ. 74 லட்சம் மதிப்பில் இருக்கும் இந்த வாகனத்திற்கு, இலங்கையில் ரூ. 64 லட்சம் வரி விதிக்கப்படுகிறது. இறக்குமதி மதிப்பு ரூ. 138 லட்சமாக இருந்தாலும், சந்தையில் இது ரூ. 165 லட்சம் வரை விற்கப்படுகிறது.
  • Toyota Land Cruiser Prado 250: உற்பத்தி நாட்டில் ரூ. 180 லட்சம் மதிப்பில் கிடைக்கும் இந்த வாகனத்திற்கு இலங்கையில் ரூ. 400 லட்சம் வரி விதிக்கப்படுகிறது. இறக்குமதி மதிப்பு ரூ. 585 லட்சம் என்றாலும், இது சுமார் ரூ. 650 லட்சம் வரை விற்பனையாகிறது.
  • Honda VEZEL X: ஜப்பானில் 88 இலட்சம் ரூபாவாக உள்ள இந்த வாகனத்திற்கு 90 இலட்சம் ரூபா வரி விதிக்கப்படுகிறது. இதனால், இறக்குமதி மதிப்பு 178 இலட்சம் ரூபாவாக இருந்தாலும், இது சுமார் 210 இலட்சம் ரூபாவுக்கு விற்பனையாகிறது. 
  • Toyota Hilux GR Sport: தாய்லாந்தில் 150 இலட்சம் ரூபாவாக உள்ள இந்த வாகனத்திற்கு 130 இலட்சம் ரூபா வரி விதிக்கப்படுகிறது. இதனால், இறக்குமதி மதிப்பு 285 இலட்சம் ரூபாவாக இருந்தாலும், இது சுமார் 320 இலட்சம் ரூபாவுக்கு விற்பனையாகிறது
  • Toyota Yaris Cross: ஜப்பானில் 65 இலட்சம் ரூபாவாக உள்ள இந்த வாகனத்திற்கு 89 இலட்சம் ரூபா வரி விதிக்கப்படுகிறது. இதனால், இறக்குமதி மதிப்பு 154 இலட்சம் ரூபாவாக இருந்தாலும், இது சுமார் 195 இலட்சம் ரூபாவுக்கு விற்பனையாகிறது

வாகன இறக்குமதியால் நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு பாதிக்கப்படவில்லை என மத்திய வங்கி விளக்கியுள்ளது. வணிக வங்கிகளில் உள்ள டொலர் வசதிகள் மூலமாகவே இவ்விவரப்பணிகள் நடைபெறும் என்பதால், மத்திய வங்கியின் மீது தாக்கம் இல்லை என அதிகாரி ஒருவர் கூறினார்.

தற்போது மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்புகள் 6.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத வாகன இறக்குமதிகள்

இதற்கிடையில், சுமார் 300 வாகனங்கள் இறக்குமதி சட்டங்களை மீறி நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இவ்வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாகனங்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சும் சுங்கத் திணைக்களமும் இணைந்து ஆலோசித்து விரைவில் தீர்மானிக்கவுள்ளன.